
டாக்டர்.ஜி.ராஜமோகன்.
புத்தாண்டு பிறக்கிறது. அடுத்தடுத்த மாதங்களில் தேர்வுகள் தொடங்கும்.பிள்ளைகள் ஆர்வமாக படிப்பார்கள். மொபைல்,டி.வி அவர்களை கவர்ந்து இழுக்கும். பள்ளியில் நெருக்கடி அதிகரிக்கும்.குழந்தைகள் திணறுவார்கள். பெற்றோர்கள் தவிப்பார்கள்.
குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்.அவர்களை திட்டி வதைக்க வேண்டாம்.
1.தேர்வு எழுதச் செல்லும் உங்கள் குழந்தையிடம் பொறுமையின்மை,தூக்கமின்மை,பசியின்மை போன்ற பொதுவான அடையாளங்கள் தென்படுகிறதா எனத் தொடர்ந்து கவனியுங்கள். இவை அவர்கள் மனரீதியாக பதற்றமாக இருக்கிறார்களா எனத் தெரிந்துகொள்ள உதவும்.
2.அதற்கு முன்னால், நீங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி பொறுமையோடும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். பதற்றம், உணர்ச்சிகரமான பீரிடல் ஆகியவை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குக் தொற்றிக்கொள்ளும் தன்மை உடையவை.
3.குழந்தைகளிடம். வகுப்பிலேயே முதலில் வரவேண்டும்,அதிக மார்க் வாங்கவேண்டும் என வற்புறுத்தாதீர்கள். அவர்களின் இயல்பான திறமைக்குத்தக்க அவர்களை படிக்க வழிவிடுங்கள்.
4.குழந்தைகளிடம் உங்கள் அக்கறையை, அன்பை அவர்கள் உணருமாறு காட்டுங்கள். குறிப்பாக, எதிர்மறையான பேச்சைத் தவிர்க்கவும்.அவர்கள் படிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டுங்கள். அதிகம் மார்க் வாங்கினால் பரிசு தருவதாகச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.
5.மற்ற மாணவர்களோடு ஒப்பிட்டு மட்டம் தட்டிப் பேசுவதைத் தவிர்க்கவும்.
6.உங்கள் குழந்தைகள் எதாவது சொல்ல முயற்சிக்கும் போது, அதனைப் பொறுமையாக காது கொடுத்துக் கேளுங்கள். அறிவுரைகள் சொல்லாமல், தீர்ப்புகள் கூறாமல், விமர்சனம் செய்யாமல், எப்போதும் திட்டிக் கொண்டிருக்காமல், அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அது அவர்களுக்கு நம்பிக்கையைத் தரும்,
பெற்றோர் தவிர்க்க வேண்டியது
1.எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பது,தொடர்ந்து படிக்கும்படி வற்புறுத்துவது, தொல்லைப் படுத்துவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
2.குழந்தைகள் ஓய்வாக இருக்கும்போது விளையாட்டிலோ, பொழுதுபோக்கிலோ ஈடுபட்டிருந்தால் குறுக்கிட வேண்டாம்.
3.தனிப்பட்ட குடும்ப பிரச்னைகள் காரணமாகவோ அல்லது வேறு எதாவது காரணமாகவோ பொறுமையிழக்கும் நிலையில் நீங்கள் இருந்தால், அப்போது குழந்தைக்குப் பாடம் சொல்லித்தர முயற்சிக்க வேண்டாம்.
4.அவ்வப்போது குழந்தை செய்யும் சிறுசிறு தவறுகளுக்கும் குறைகளுக்கும் அவர்களிடம் கோபத்துடன் நடந்து கொள்ள வேண்டாம்.
5.தேர்வுக்குத் தயாராகும் குழந்தைகள் முன்னிலையில் குடும்பப் பூசல்களையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்த வேண்டாம்.
இந்த வழிமுறைகள், விஞ்ஞானபூர்வமானவைகள். இவற்றைச் சரியாகப் பின்பற்றினாலே போதும். வெற்றி தானாக நம் கைக்கு வரும்.மார்க்கைவிட நம் குழந்தைகள் முக்கியம்.

