
எங்கள் கிராமத்தில், உடும்புக் கறி சாப்பிட்டால் எந்த வியாதியும் வராது என்று சொல்கிறார்கள்.சிலர் சாப்பிட்டதாகவும், தெம்பாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்…இது பற்றிய விவரங்கள் தேவை.
-டி.செந்தில், கரூர்.
பொருளாதார வளர்ச்சி இல்லாத காலத்தில்… அரிதான உயிரினங்களை வேட்டையாடி சாப்பிட்டு வீர வசனங்கள் பேசியது உண்டு.இப்போது யாராவது அப்படி சொன்னால் நம்ப வேண்டாம்.
இந்தியாவில் உடும்பு என்பது அரிதான உயிரினமாக ஆகிப்போனதால், 1972 வன விலங்குப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடும்புகளைக் கொல்வது, புலிகளைக் கொல்வதற்கு ஒப்பான தண்டனையைப் பெற்றுத்தரும். இந்தியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பண்டைய காலம் முதல் உடும்புக்கறி பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக நம்பப்படுகிறது.ஆனால் உண்மை என்ன வென்றால் வேட்டையாடி உண்ணும் மற்ற வனவிலங்குகளைப்போல, உடும்புக்கறி என்பது கொழுப்பு குறைவான புரதம் மிகவும் அதிகமான மாமிசம் ஆகும்.அதனால் மிகுந்த புரதம் கிடைக்கும். மற்றபடி வேறொன்றும் விசேஷம் இல்லை. உடும்புக்கறி சாப்பிட்டு ஜெயிலுக்குப் போவதற்கு பதிலாக,அருகில் உள்ள சிக்கன்,மட்டன் கடையில் கறி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இருக்கலாம்.

