
அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அதனை குணப்படுத்த இயலும். நுரையீரல் புற்றுநோயும் அப்படித்தான். ஆனால், கசப்பான உண்மை என்னவெனில், இறுதி நிலையில்தான் பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இருமும்போது ரத்தம் வருதல், அதீதத் தலைவலி, சுவாசக் கோளாறு, நெஞ்சுவலி உள்ளிட்டவை நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள். அவற்றை அலட்சியப்படுத்தாமல், உடனடியாகப்பரிசோதனை மேற்கொண்டால் புற்றுநோய் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும். கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகள் இல்லாமல் சிறிய அறுவை சிகிச்சை மூலமாகவே நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த இயலும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் சமீபகாலமாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புகைப் பழக்கம் அதற்கு முக்கியக் காரணம் என்றாலும், அப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் அதிக அளவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. தெரிவித்தார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 55 சதவீதம் பேர் புகைப் பழக்கம் இல்லாதவர்கள் என்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அந்த வகையான புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு காற்றில் உள்ள மாசுதான் முக்கியக் காரணம். இதுதொடர்பாக விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. எது, எவ்வாறாயினும், நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க புகையிலை ஒழிப்பு பிரசாரத்தைத் தாண்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.

