
எனக்கு எல்லாமே கெட்டதாகவே நடக்கிறது… யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை, ஏமாற்றவில்லை, வயிற்றில் அடித்து வாழவில்லை… எனக்கு நேரம் சரியில்லை.நான் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று சிலர் புலம்புவதை பார்க்கலாம்.இந்த புலம்பலால் நல்லது எதுவும் நடக்காது.
மாறாக, உங்கள் எண்ணங்களை வசப்படுத்துங்கள்… வாழ்க்கை வசந்தமாகும்!
பிரச்னைகள் வரும்போது அதனை மிரட்சியாகப் பார்க்காமல்,அதை சமாளித்து வெற்றி பெறுவது எப்படி என்று யோசியுங்கள். அந்த சிந்தனையே பாசிடிவ் எண்ணமாக ஆழ்மனதிற்குள் பதியும்.அதற்கு ஏற்பவே உங்கள் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் ஏற்படும்.
ரோஜா இதழ்கள் நிரப்பிய மெத்தென்ற சிவப்புக் கம்பளத்தில் நடந்தாலும்… கால்களில் முட் செருப்பை அணிந்து கொண்டிருந்தால் பயணம் வலியும் வேதனையுமாகத்தான் இருக்கும்.அதுவே கரடு முரடான பாதையாக இருந்தாலும் மெத்தென்ற நல்ல காலணியை அணிந்து கொண்டிருந்தால் பயணம் இதமானதாகவே இருக்கும்.
இயன்றவரை எதிர்மறை விஷயங்கள் உங்கள் ஆழ்மனதை எட்டாதபடி தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் சூழலையும் பாசிடிவ்ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எண்ணங்களே உங்களை உருவாக்குகின்றன. அதை உணர்ந்து உங்கள் எண்ணங்களைக் கொஞ்சம் கவனத்தோடு கையாண்டு பாசிடிவ் எண்ணத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
உறக்கத்தில் வரும் கனவுக்கு நீங்கள் உத்தரவாதம் தரமுடியாது என்றாலும் விழித்திருக்கும்போது சந்தோஷக் கனவுகளைக் காணுங்கள்.அப்படிச் செய்தால் உங்கள் மனதில் பாசிடிவ் எண்ணமே நிறையும். அதனால் மகிழ்ச்சிப் பூ எப்போதும் மலரும்!
நீங்கள் நேர்மறையான சிந்தனை உடையவர்களாக இருந்தால் நிச்சயம் நீங்களும் லக்கியானவராக, வெற்றியாளராக இருப்பீர்கள் என்கிறது வாழ்வியல். உண்மையில், கிடைத்திருப்பது நாம் தேடியது இல்லை என்று பார்க்கும்போது, அதில் அதிர்ஷ்டமும் இல்லை என்று தோன்றுகிறது. அதையே என்ன கிடைத்திருக்கிறது என்ற நோக்கத்தோடு பார்க்கும்போது, அங்கே அதிர்ஷ்டமும் ஒளிந்திருப்பது தெரிகிறது.
லக்கியானவர்களாக சொல்லப்படுபவர்கள், தங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை அடிக்கடி மனதுக்குள் அசை போடுகிறார்கள். அதே நேரம் அன்லக்கி என சொல்லக் கூடியவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த தோல்வி,அவமானம் என எதிர்மறையான நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் அசை போடுகிறார்கள். ஒருவருடைய ஆழ்மனதும், அவர்கள் மனதில் என்ன மாதிரியான காட்சிகள் அடிக்கடி ஓடுகிறதோ அதையே அவர்கள் விரும்புவதாகத் தீர்மானித்து அத்தகைய சூழலை நோக்கியே அவர்களை நகர்த்துகிறது.
அதனால்தான் அதிர்ஷ்டசாலிகளாக நினைப்பவர்கள் தொடர்ந்து அதிர்ஷ்டத்தின் பக்கமே நகர்கிறார்கள்.இந்த உண்மையை உணர்ந்தால் நீங்களும் நிரந்தர அதிர்ஷ்டசாலிதான்!
அனைவரும் மன மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்!
– ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)

