
டாக்டர் பொ.முருகன்
குழந்தைகள் நல மருத்துவர்
சமீபத்தில் நான் சந்தித்த மூன்று டீன்ஏஜ் கேஸ்களை முதலில் பார்ப்போம். பதினாறு வயதாகும் கீதாவுக்கு கவலைகள் அதிகம். தான் உயரமாக இல்லை, மிகவும் குள்ளம் என்பது எப்போதும் அவள் மனதில் உறுத்திக்கொண்டேயிருக்கும் விஷயம்: அடுத்தது முகப்பருக்கள். நாளடைவில் கவலைகளில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்து அவளைப் பற்றிய ஒரு தாழ்ந்த சுயமதிப்பீட்டுக்கு அவள் ஆளானாள். இது மனச்சோர்வை ஏற்படுத்தியது. விளைவு. படிப்பில் நாட்டம் குறைந்தது. தனிமையை விரும்பி மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கத் தொடங்கினாள். இந்நிலையில், கீதாவின் பெற்றோர் அவளை என்னிடம் அழைத்து வந்தார்கள்.
அம்பிகாவுக்கும் டீன்ஏஜ்தான். திடீரென்று ஒருநாள் பள்ளிக்கூடத்தில் பிரேயரின்போது மயங்கி விழுந்தாள் அம்பிகா. முதலில் இது சாதாரணமானதுதான் என்று விட்டுவிட்டார்கள். ஆனால், இது அடிக்கடி தொடர்ந்தது. சில மாதங்கள் மாதவிடாய் கோளாறுகளும் ஏற்பட்டது. அவள் மிகவும் மெலிந்து போயிருந்தாள்.
ஒரு மாலை நேரத்தில் கிளினிக்குக்கு வந்த மதன் விவகாரம் – கீதா, அம்பிகா ஆகியோரிடமிருந்து மாறுபட்டது. மதனுக்கு 15 வயது. பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறான்.
ஆள் பார்ப்பதுக்கு குண்டு கல்யாணம் சாயலில் இருந்தான். ‘கத்தரிக்கா, கத்தரிக்கா குண்டு கத்தரிக்கா’ பாடல்தான் அவனைப் பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது. மதனுக்கு அவனுடைய வயிறே அவனுக்கு அருவருப்பாகத் தெரிந்தது. மதனின் இளைய சகோதரன் சச்சினின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான். இத்தனைக்கும் மதனின் அப்பாவோ, அம்மாவோ குண்டானவர்கள் இல்லை.
சரி, இனி விஷயத்துக்கு வருவோம். இந்த மூன்று கேஸ்களும் உதாரணங்கள் மட்டும் தான். இதுபோல் விடலைப் பருவத்திலிருப்பவர்கள், பிரச்னைகளுடன் கிளினிக்குகளுக்கு வருவது இப்போது அதிகரித்திருக்கிறது. ஏன், இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். பத்திலிருந்து பத்தொன்பது வயதுக்குட் பட்டவர்களை வளரும் இளமைப் பருவத்தினர் என்று உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. இவர்கள் குழந்தைகளும் இல்லை; வயது வந்தவர்களும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வளரும் பருவம்.
வளரும் பருவம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படும் காலம். அத்துடன் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட இதனால் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும். குறிப்பாக, இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். சிறிது தயக்கமும் அடைகிறார்கள். முகப்பரு. மாதவிடாய் பிரச்னைகள், களைப்பு, பூப்படைதல், உடல்பருமன், நடத்தை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்ற விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் குவிந்து விடுகின்றன. பாலியல் உட்பட எதைப் பற்றி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு ஒரு விசேஷ வழிகாட்டியின் உதவி தேவைப்படும் பருவம் இது.
அந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது குழப்பங்கள் மனரீதியாகவும். உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. குறுக்கு வழியில் பணம் பறிக்க ஆசைப்படும் சில விளம்பரங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.
விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்துகொண்டு, தங்களுடைய உடல்நலப் பரா மரிப்புக்குத் தேவையான பொறுப்பையும் வழிமுறைகளையும் சயமாக வளர்த்துக் கொள்ளும்போது பிரச்னைகளைச் சுலப மாகத் தவிர்த்துவிட முடியும்.
அம்பிகாவுக்கு ஏற்பட்ட பிரச்னைதான் இப்போது அதிகமாக டீன்ஏஜ் பெண்களிடம் காணப்படுகிறது. இதற்கு மருத்துவ உலகில், ‘ஐஸ்வர்யாராய் சிண்ட்ரோம்’ என்று பெயர் வைத்துள்ளோம். அதாவது ஐஸ்வர்யாராய் போல் ஒல்லியாக இருக்கவேண்டும் என்று டீன்ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள், ஒல்லியாக இருக்கும் பெண்களைத்தான் விரும்புகிறார்கள்; ஒல்லிதான் கவர்ச்சி: எல்லா நடிகைகளும் மாடல் அழகிகளும் ஒல்லியாகத்தான் இருக்கிறார்கள்; ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியம்’ என்ற எண்ணங்கள்தான் இதற்குக் காரணம்
ஆனால், அம்பிகா குண்டு. அவளது நண்பர்கள், அவளை எப்போதும் குண்டூஸ் என்று கிண்டலடித்திருக் கிறார்கள். எனவே, மெலிய வேண்டும் என்பதற்காக மதியம் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆப்பிள் மட்டும்தான் சாப்பிட்டிருக்கிறாள். காலையிலும் இரவிலும் பெற்றோருக்கு முன்னால் சாப்பிட்டுவிட்டு கழிப்பறைக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் வாந்தி எடுத்திருக்கிறாள்.
அம்பிகா மாதிரி மெலிய வேண்டும் என்று விரும்பும் டீன்ஏஜ் வயதிலிருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் இந்த வழிமுறைகளைத்தான் பின்பற்றுவார்கள்.
ஏன் ஆண்களும் கூடத்தான். ஆண்களுக்கு ஏற்பட்டிருப்பது ‘ஹிரித்திக்ரோஷன் சிண்ட்ரோம்’.
இப்படி குறைவாக சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை, தாழ்வு மனப்பான்மை படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். அவர்களுக்கு உடல் மட்டும் ஒரு மனிதனுக்கு முக்கியமில்லை; அறிவு, கடும் உழைப்பு. விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என புரிய வைக்கவேண்டும். மல்லேஸ்வரியைக் கூட உதாரணமாகக் கூறலாம். மல்லேஸ்வரி குண்டு. ஆனால், பளுதூக்கும் வீராங்கனையாக அவர் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறார். அழகாக இருக்கிறார். அழகு என்பது நம்மிடம் இல்லை. பார்ப்பவர்களின் கண்ணில்தான் இருக்கிறது. ஒருவருக்கு அழகற்றதாகத் தெரியும் ஒருவர், இன்னொருவருக்கு அழகாய்த் தெரிவதற்கான காரணத்தை விளக்கவேண்டும்.
கீதாவுக்கு தான் உயரமாக இல்லை; குள்ளமாக இருக்கிறோம் என்ற கவலை. ஆனால், இது அவளே வர வழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு மரபுரீதியாக, உணவு பற்றாக்குறையால், ஹார்மோன் கோளாறுகளால்…இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இதில் எதுவும் கீதாவுக்கு இல்லை. அவருடையது ‘தள்ளிப்போகும் வளர்ச்சி’தான். சில குழந்தைகளுக்கு இதுபோல் ஆகும் சில வருடங்களுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து சராசரி உயரத்தை அவர்கள் அடைந்து விடுவார்கள். ஆனால் இது தெரியாததால், கீதா மனக் குழப்பங்களுக்கு ஆளானாள். இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக அவளுக்கு பூப்படைவதும் தள்ளிப்போனது. விவரம் புரிந்த பிறகு தாழ்வு மனப்பான்மை அகன்று நம்பிக்கையுடன் வளைய வரத் தொடங்கினாள் கீதா. அடுத்த வருடமே பூப்படைந்தாள்.
பூப்படைவது சராசரியாக எட்டிலிருந்து 13 வயதுக்குள் நடக்கிறது. இந்த வயதில் பெரும்பாலும் அது பற்றிய அறிவு இல்லாமல்தான் நம்மூர்க் குழந்தைகள் வளர்கிறார்கள். தொடர்ந்து மாதவிடாய், மார்பகம் வளர்வது, மர்ம இடங்களில் முடி வளர்வது, முகப்பரு போன்ற உடலில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாக மனக்குழப்பங்கள் கூடிக்கொண்டே போகின்றன. இதுபோல் ஆண்களுக்குப் பிறப்புறுப்பும் விதையும் பெரிதாவது, மீசை எட்டிப் பார்ப்பது, குரல் உடைவது என்று பல்வேறு விஷயங்களைப் பற்றி ஏக மனக் குழப்பங்கள். இதைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு குறைவாக உள்ளதால் பயமடைகிறார்கள் அல்லது அம்பிகா மாதிரி தவறான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். இதனால் ஏற்படும் மனநல பாதிப்பு காரணமாக பசியின்மை, எடை குறைவது, சோர்வடைதல், முடிகொட்டுதல் போன்ற விளைவுகள் ஏற்படும். மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேசவேண்டும் .பேச கூச்சமுள்ள பெற்றோர்கள், இதுதொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம். சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்கள், சமூக. கலாசார மாறுதல்கள், உடல் மாற்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பேச வேண்டும். இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் கூச்சம் அடைகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். நாமும் நம் பருவத்தில் பாதி நேரம் கண்ணாடிக்கு முன் நின்று நம்மை நாமே ரசிப்பதிலேயே செலவிட்டவர்கள்தானே என்ற உண்மையையே நினைத்துக்கொண்டாலே போதும் தயக்கம் விலகிவிடும்.

