
டாக்டர் வி.விக்ரம்குமார், சித்தமருத்துவர்
‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும். பற்றுக்கம்பிகளின் உதவியோடு தொற்றித் தொற்றி உயரமாக வளர்ந்துகொண்டே போகும். சதைப் பற்றுள்ள இந்த மூலிகை, எலும்புகளுக்கு உற்ற தோழன். அது என்ன?’ – இந்த மூலிகை விடுகதைக்கான பதில் ‘பிரண்டை!’. கிராம வேலிகளில் காட்சியளித்த பிரண்டை, இப்போது அனைத்து காய்கறிச் சந்தைகளின் வாயிலிலும் நமது நலம் காக்க காத்துக் கிடக்கிறது.
உணவாக:பசியெடுக்காமல் தினமும் அவதிப்படுபவர்கள் பிரண்டைத் துவையலைச் சாப்பிடலாம். இளம் பிரண்டைத் தண்டிலிருக்கும் நாரை நீக்கிவிட்டு, நெய் விட்டு வதக்கி உப்பு, புளி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து துவையல்போலச் செய்து, நல்லெண்ணெய் சிறிது கலந்து சாப்பிட, செரிமானத் திறன் அதிகரித்து நல்ல பசி உண்டாகும். தண்டு மட்டுமன்றி, இலைகளைப் பயன்படுத்தியும் துவையல் செய்யலாம். முதிர்ந்த வயதில் தோன்றும் சுவையின்மை நோய்க்கும் பிரண்டைத் துவையல் பலன் கொடுக்கும்.
நெய் விட்டு அரைத்து வதக்கிய பிரண்டையைச் சிறுநெல்லி அளவு சாப்பிட்டுவர, மூல நோயில் உண்டாகும் ஆசனவாய் எரிச்சல், வலி, ரத்தம் வடிதல் விரைவாக மறையும். குடலில் இருக்கும் பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது. பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் உடல் சோர்வுக்கும் பிரண்டையை உணவில் சேர்த்து வரலாம்.
மருந்தாக: பிரண்டையின் சத்துக்கள், ரத்தத்தில் அளவுக்கு மீறி உலாவும் கொழுப்பு வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடற்பருமன், அது சார்ந்த பிரச்சினைகளுக்கு பிரண்டையின் செயல்பாடுகள் பலன் அளிக்குமா என்பது குறித்தும் நிறைய ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உடலில் உண்டாகும் வீக்கங்களைப் போக்கும் தன்மை பிரண்டைக்கு இருக்கிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உண்டாகும் வலி, வீக்கத்தை இது விரைவாகக் குறைக்கும். முறிந்த எலும்புகள் ஒன்றுகூடும் செயல்பாடுகளை பிரண்டை துரிதப்படுத்துகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் ‘பிரண்டை உப்பு’ எனும் சித்த மருந்து, குடல் சார்ந்த நோய்களுக்குச் சிறந்த மருந்து.
வீட்டு மருந்தாக: பிரண்டைத் தண்டுகளை நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து, வடகமாகக் குளிர் காலத்தில் பயன்படுத்தி வர, கப நோய்கள் அவ்வளவு எளிதாக அணுகாது என்கிறது ‘தேரையர் காப்பியம்’ நூல். உடல் சோர்வு ஏற்பட்டாலே சுண்ணச் சத்துக் குறைபாடு என்று நினைத்து, தாமாகச் சென்று மருந்தகங்களில் கிடைக்கும் ‘கால்சியம்’ குளிகைகளை வாங்கிச் சுவைக்கும் போக்கு ஆபத்தானது. ரத்தத்தில் சுண்ணச் சத்தின் அளவை முறைப்படுத்த, உணவில் அவ்வப்போது பிரண்டையைச் சேர்த்து வருவதோடு, சிறிது சூரிய ஒளியும் போதும்.

