டாக்டர்.கே.ராதாகிருஷ்ணன்,  மனநல மருத்துவர்.

காற்று புக முடியாத இடங்களில்கூட நுழைந்துவிடும் இணையதளம்.முன்பு கம்ப்யூட்டர் தேவைப்பட்டது.இப்போது செல்போன் போதும்.

 சில வருடங்களுக்கு முன்புவரை வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளைப் பெற்றோர் நேரடியாகக் கண்காணிக்க முடிந்தது. ”இவ்வளவு நேரம் ரோட்டில் நின்று என்ன கதை பேசுற” என்று பெற்றோரோ, “உங்க பையன் பஸ் ஸ்டாண்ட்கிட்ட ஒரு பொண்ணுகிட்ட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்ததைப் பார்த்தேனே”என்று அப்பாவிடம் போட்டுக்கொடுக்கும் அண்ணாச்சியோ இணைய உலகத்தில் நடப்பதைக் கண்காணிக்க முடியாது. அதுவும் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் இணையதளம், மொபைல் போனை அவர்கள் பயன்படுத்துவதற்கு நேரம் காலம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இணைய போதை

இணைய அடிமைத்தனத்தை (Internet addiction) பற்றி மருத்துவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது,என்னபாஸ் நீங்க எதை எடுத்தாலும் அடிமைத்தனம்னு சொல்றீங்க… மனநலப் பாதிப்புன்னு சொல்றீங்க. அதனால எத்தனை நல்ல விஷயங்கள் கிடைக்குது, நீங்க இப்படிச் சொன்னா நாங்க என்னதான் பண்றது? என்று கேட்டார். அவர் கேட்டதில் நியாயம் இருக்கிறது

வலைதளம் என்பது சமீபகாலமாக மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது, உண்மைதான். ரயில், பஸ் டிக்கெட் புக் செய்வதிலிருந்து வரன் பார்ப்பதுவரை பல்வேறு அன்றாட தேவைகளுக்கு இணையதளம் மற்றும் மொபைல்போன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.செல்போன் இருந்தால் போதும்… எங்கும் போகலாம், எதையும் வாங்கலாம்.

ஆனால், நம் கண்களை மறைக்கும் விஷயமாக, பலருடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒன்றாகவும் அது மாறிவருவதைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

படிக்க வேண்டிய குழந்தைகள் இன்டர்நெட் விளையாட்டில் எப்போதும் மூழ்கிக் கிடப்பது… தூக்கம் கெடுவது… ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் பலமணி நேரம் செல்போன் பார்ப்பது… எல்லாமே பிரச்சனையாக மாறுவது.. கண்டித்தால் சண்டை போடுவது, யாரிடமும் பேசாமல்,எதையோ பறிகொடுத்தது போல் தவிப்பது…இவற்றை எல்லாம் பார்த்து பெற்றோர்கள் கலங்கிப் போகிறார்கள்.

பிரச்சினையின் தீவிரம்

புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் 8-18 வயதுக்கு உட்பட்ட இளம்பருவத்தினரில் 23 சதவீதம் பேர் இணையதளம் அல்லது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். சீனாவில் 13 சதவீதம் வளர் இளம் பருவத்தினர் இணையதள அடிமைகளாக உள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்களில் மேற்கத்திய நாடுகளுக்குக் குறைச்சலில்லாமல் இந்தியாவும் இடம்பெற்றிருப்பது மட்டுமல்லாமல், இணையதளத்தைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடான சீனாவுக்கு அடுத்துப் பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துவருவது பெருமைக்குரிய விஷயமல்ல. முன்னெச்சரிக்கையோடு அணுகவேண்டிய விஷயமும்கூட.

தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி சுமார் இரண்டு சதவீதம் சிறார்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை பெறும் அளவுக்கு இணையதளம் மற்றும் கணினிகளுக்கு (ஸ்மார்ட் போன் உட்பட) அடிமையாக மாறியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி. இத்தனை விரிவாக இதைப் பரிசீலிக்க வேண்டியதற்கான காரணம் மொபைல்போன், இணையதளம் போன்றவை அப்படி என்ன செய்துவிடும்? என்று நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

எளிதில் அடிமையாவது யார்? 

இணையதளத்தைப் பயன்படுத்தும் எல்லோரும் அதற்கு அடிமை ஆவதில்லை.

நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக  உள்ளவர்களை எவ்வாறு கிருமிகள் எளிதில் தாக்குகின்றனவோ, அதுபோலச் சில குறிப்பிட்ட பிரச்சினையுள்ள வளர்இளம் பருவத்தினர் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பின்வரும் வகையினர் அதிகம் பாதிக்கப்படக் கூடும்.

*மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 

*இயற்கையாகவே அதிகப் பதற்றத் தன்மை உள்ளவர்கள்.

*கூச்ச சுபாவம் உள்ளவர்கள்.

*படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள்.

*கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள். 

*சமூகப் பழக்கங்கள் குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கும் குழந்தைகள். 

*அதிகத் துறுதுறுப்பு மற்றும் கவனக் குறைவு நோயால் பாதிக்கப்படும் சிறார்கள்(ADHD).

*மிதமான அளவு ஆட்டிசம் (Autism) பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

*தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.

*அதிக வேலைப்பளு மற்றும் படிப்பு திணிக்கப்படும் சிறார்கள்.

 *சிறு வயதிலேயே சமூக விரோதச் செயல்கள் மற்றும் போதைப் 

பழக்கங்களுக்கு ஆளாகும் வளர்இளம் பருவத்தினர்.

எது இணைய அடிமைத்தனம்?

இணையதளம் மற்றும் ஸ்மார்ட் போனைக் கல்வி, தொழில் மற்றும் இன்றியமையாத காரணங்களுக்காக அன்றாடம் பயன்படுத்துவது அடிமைத்தனம் அல்ல. ஆனால், அதைத் தவிர மற்ற நேரங்களில் பின்வரும் காரணங்களுக்காக ஒருவர் அதிகம் பயன்படுத்தினால், அவர் இணையத்துக்கு அடிமையானதாக எடுத்துக்கொள்ளலாம்.

*நாளுக்கு நாள் இணையதளம் (பேஸ்புக், வாட்ஸ்அப் உட்பட) பயன்படுத்தும் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்லுதல்.

*ஆரம்பத்தில் தீர்மானித்த நேரத்தை விட அதிக நேரம் சென்ற பின்னும் கட்டுப்படுத்த முடியாத தன்மை.

*அதிக நேரம் செலவழித்தால்தான் திருப்தி என்ற தன்மை அல்லது ஒரு அப்ளிகேஷனையோ,

மொபைல் போன், லேப்டாப் போன்றவற்றில் திருப்தியில்லாமல் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பது.

*வலைதளத்தில் நேரம் விரயமாவதால் படிப்பு, விளையாட்டு, பிறருடன் நேரடியாகச் செலவிடும் நேரம் உட்பட மற்ற முக்கிய வேலைகளைப் புறக்கணிக்க ஆரம்பிப்பது.

*பெற்றோரிடம் இணையப் பயன்பாட்டைப் பற்றிய தகவல்களை மறைப்பது அல்லது பொய் சொல்வது.

*அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது தெரிந்தும், விட முடியாத நிலை. 

*இணையதளத் தொடர்பு மற்றும் மொபைல் போன் இல்லாமல் ஒருநாள் இருந்தாலும் எதையோ பறிகொடுத்த உணர்வு, எரிச்சல், கோபம், மன உளைச்சல், தூக்கமின்மை, பதற்ற உணர்வு, உடல் மற்றும் மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவது.

*படிப்பு உட்பட வாழ்க்கையின் மற்றப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு வடிகாலாக, இணையதளச் செயல்பாடுகளை அணுகுவது.

இன்டர்நெட் அடிமைத்தனம் உள்ளவர்களை நோயாளிகளாக கருத வேண்டாம்.அவர்களை கடும் சொல்லால் திட்டி வைக்கவும் வேண்டாம்.தேவைப்பட்டால் மனநல மருத்துவர் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்து உதவுங்கள்.இளைய சமுதாயம் சிறப்பாக வாழ எல்லோரும் வழி காட்ட வேண்டும்.